உணவுப் பாதுகாப்புச் சட்டம்: யாருக்கு ஆதாயம்?


‘ஏழ்மை என்பது ஒரு மனநிலை’ - அண்மையில் ‘இந்திய இளவரசர்’ ராகுல்காந்தி உதிர்த்த முத்து இது. அதாவது ஏழ்மை என்பது நடைமுறையில் இல்லையாம். மனதில் அப்படி நினைத்துக்கொள்வதால்தான் ஏழ்மையுடன் இருக்கிறார்களாம். சரி, நாளையில் இருந்து ‘நாம் எல்லோரும் பணக்காரர்கள்’ என்று நினைக்கத் தொடங்கினால், ஏழைகள் எல்லாம் அம்பானிகளாகிவிடுவார்களா? 





இது ராகுலுடைய கருத்து மட்டுமல்ல... மன்மோகன்சிங், ப.சிதம்பரம், மாண்டேக்சிங் அலுவாலியா உள்ளிட்ட இந்திய பொருளாதார மேதைகளின் கருத்தும் இதுதான். அவர்களும், ‘இந்த நாட்டில் ஏழைகளே இருக்கக்கூடாது’ என்றுதான் நினைக்கிறார்கள். அதற்காக திட்டங்களும் தீட்டுகின்றனர். எத்தகைய திட்டம் எனில், ‘ஒரு நாளைக்கு 28 ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள்தான் ஏழைகள். 29 ரூபாய் சம்பாதித்தால் ஏழை அல்ல’ என்று அறிவித்து, ஆடி மாத அதிரடி தள்ளுபடி போல, ஏழைகளை ஒரே நாளில் குறைத்துவிடுகிறார்கள். இந்த நாட்டின் 100 கோடி ஏழைகளின் நெற்றியில் ‘இனி நீங்கள் ஏழைகள் இல்லை’ என்று எழுதி ஒட்டிவிட்டால் அவர்கள் ஏழைகள் இல்லை என்றாகிவிடுவார்களா? அதுதான் இங்கு நடந்துகொண்டிருக்கிறது.

‘உணவு பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் இந்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் சாராம்சம் மேலே சொன்னதுதான். ‘அனைத்து ஏழைகளுக்கும் உணவை உத்தரவாதப்படுத்துவதே இச்சட்டத்தின் நோக்கம்’ என்று இப்போது சொல்லப்படுகிறது. 29 ரூபாய் சம்பாதிப்பவன் ஏழை இல்லை என்று ஏற்கெனவே சொல்லியாகிவிட்டது. இரண்டையும் இணைத்துப் பாருங்கள். சில கோடி பேர்தான் இந்தியாவில் ஏழைகளாக இருப்பார்கள்.

சரி, இந்திய அரசு, தன் நாட்டில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்கு ஏன் துடியாய் துடிக்க வேண்டும்? ஏனெனில் உலக வங்கி, மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை வெட்டச் சொல்லி நிர்பந்திக்கிறது. இந்த நிபந்தணையின் பெயரில்தான் ஏற்கெனவே பல மில்லியன் டாலர் கடன் அளித்துள்ளது.(இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனின் மதிப்பு, சுமார் 43 லட்சம் கோடி ரூபாய்). ‘உணவு, கல்வி, சுகாதாராம் போன்ற துறைகளில் மக்களுக்கு சலுகை விலையில் எதையும் தரக்கூடாது; ஒரு நிறுவனம் போல லாப விகிதத்துடன்தான் விற்பனை செய்ய வேண்டும்; அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்குரிய ‘வாங்கும் சக்தி’யை மக்களிடம் வளர்த்தெடுக்க வேண்டும்’ என்கிறது உலக வங்கி.

இந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் கோடிக் கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர். அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் என அனைத்துப் பொருட்களுமே ஏதோ ஒரு வகையில் மானிய விலையில்தான் விநியோகிக்கப்படுகின்றன. ரேஷனில் இந்தப் பொருட்களை வாங்கும் மக்களிடம் ‘வால்மார்ட்டுக்கு வா..’ என்றால் எப்படி வருவார்கள்? ரேஷன் கடைகளை ஒழித்துக் கட்டினால் வால்மார்ட்டுக்கு வந்துதானே ஆக வேண்டும்? (வால்மார்ட் என்பது இங்கு ஒரு குறியீடு மட்டுமே. இதுபோன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் வரும்). அதன் முதல் படிதான் உணவுப் பாதுகாப்பு மசோதா.

இந்த மசோதா சொல்வது என்ன? வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும், 25 கிலோ அரிசி அல்லது கோதுமையை கிலோ 3 ரூபாய் விலையில் கொடுப்பதுடன், தரமான உணவுக்கான உத்திரவாதத்தையும் இந்த மசோதா வழங்குகிறது. ஏழைகள் என்று பொத்தாம்பொதுவாக சொல்லப்படும் நிலையில், யார் ஏழை என்ற கேள்விக்கு விடை காண வேண்டும்.

நடைமுறையில் எவ்வளவு ஏழையாக இருந்தாலும்; குடிசை வீட்டில் கூவம் ஓரம் குடியிருப்பதாகக் கொண்டாலும் மாதம் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாயாவது சம்பாதிக்க வேண்டியுள்ளது. இதன்படி தினசரி வருமானம் 170 ரூபாயாவது வேண்டும். மத்திய அரசின் திட்டக் கமிஷனோ, ஒரு நாளைக்கு 28 ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள்தான் ஏழை. அதற்கு மேல் சம்பாதித்தால் ஏழை இல்லை என்கிறது. இந்த வரையின்படி 120 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் 28 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை சில கோடிகள்தான் வரும். திட்டக் கமிஷன் அளவீடுகளில் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை 11 கோடி பேர் வருகிறது. இதில் இன்னொரு காமெடிக் கூத்து என்னவெனில், கடந்த ஆண்டு இதே திட்டக் கமிஷன், ஒரு நாளைக்கு 32 ரூபாய் சம்பாதித்தால் ஏழை இல்லை என்றது. இந்த வருடம், அவர்களுக்கு ‘டார்கெட் பிரஷ்ஷரோ’ என்னவோ, 4 ரூபாயைக் குறைத்துவிட்டார்கள். 28 ரூபாய் சம்பாத்தாலே ஏழை இல்லையாம். இப்படியே ஒவ்வொரு ஆண்டும் நான்கு ரூபாயாகக் குறைத்துக்கொண்டு போனால் இன்னும் 7 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரே ஒரு ஏழைக் கூட இருக்க மாட்டார்கள். உலகிலேயே ஏழ்மை ஒழிப்பில் அதிவேகமாக முன்னேறிய நாடு என்று இந்தியா பட்டம் பெறலாம். என்ன கோமாளிக்கூத்து இது?

பன்னாட்டு நிறுவனங்களுக்கான வேட்டைக் காடாக இந்தியாவைத் திறந்துவிடும் ‘காட் ஒப்பந்தத்தில்’ நாடாளுமன்றத்திற்கேத் தெரியாமல் கள்ளக் கையெழுத்துப் போட்டவர் நம் மன்மோகன்சிங். அந்த காட் ஒப்பந்தப்படி, இந்திய சந்தைகளை சர்வதேச நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டாக வேண்டும். அதற்கு இடையூறாக இருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அவை ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இந்த வகையில் பல காலமாக இந்தியாவின் பொது விநியோக முறையை ஒழிக்க பகாசுர நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அதை ஒரே நேரத்தில் மொத்தமாக செய்ய முடியாத நிலையில், மானியங்களை பணமாக கணக்கிட்டு வங்கிக் கணக்கில் செலுத்தும் ‘உங்கள் பணம், உங்கள் கையில்’ திட்டமாக கொண்டு வந்தார்கள். இப்படி இன்னும் பல திட்டங்கள் வரப்போகின்றன. அனைத்துமே மானிய வெட்டு என்பதை இலக்காகக் கொண்டவை. உணவுப் பாதுகாப்பு மசோதாவும் இதன் ஓர் அங்கம்தான். இதன்மூலம் பொது விநியோக முறைக்கு அளிக்கப்படும் மானியத்தின் கணிசமான பகுதியை ரத்து செய்ய முடியும்.

உண்மையில் இப்போது இந்தியா மிகப்பெரிய இக்கட்டில் சிக்கிக்கொண்டுள்ளது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு கிடுகிடுவென சரிந்து விழுந்திருப்பதுடன், திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்கள் மலைபோல் குவிந்து நிற்கிறன. மொத்த வெள்நாட்டுக் கடன்களின் மதிப்போ, 4.3 லட்சம் கோடி ரூபாய் என்ற மயக்கமடைய வைக்கும் எண்ணிக்கையில் உள்ளது. இந்த சீரழிவு நிலைக்கு நாடு வந்தடையக் காரணம், கடந்த 20 ஆண்டுகளாக அசுர வேகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தாராளமய, தனியார்மய கொள்கைகளே. நிலைமை இப்படியிருக்க, இப்போதையை இக்கட்டில் இருந்து மீண்டு வருவதற்கு மேலும் அதிகமான தாராளமய, தனியார்மய ‘சீர்திருத்தங்களை’ செய்யப் போவதாக அறிவிக்கிறார் மன்மோகன். ‘இந்தாளு உண்மையிலேயே லூசா, இல்லை லூசு மாதிரி நடிக்கிறாரா?’ என்பது பல சமயங்களில் புரிவதில்லை. எந்த சீரழிவினால் ஒரு நோய் வந்ததோ, அதே சீரழிவைவே தீர்வாக முன் வைக்கும் இவரைப் போன்ற நபர்களை ‘பொருளாதார வல்லுநர்கள்’ என்று அழைப்பது எத்தனைப் பெரிய நகைமுரண்?

இவர்கள் எந்த அமெரிக்காவை காட்டி இத்தகைய சீர்திருத்தங்களை அமல்படுத்தத் துடிக்கிறார்களோ... அந்த அமெரிக்காவில் சமீபத்தில் டெட்ராய்ட் என்ற நகரமே திவால் ஆனது. ‘உலகின் மோட்டார் நகரம்’ என்ற பெயர்பெற்ற டெட்ராய்டில் திரும்பிய திசை எங்கும் மோட்டார் நிறுவனங்கள் முளைத்திருந்தன. சமீப ஆண்டுகளாக உற்பத்தி குறைந்ததால் பல நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலைமை. கைவிடப்பட்ட தொழிற்சாலைகளின் பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள் நகரம் எங்கும் சிதைந்து கிடக்கின்றன. நகரத்தின் மக்கள் தொகை பாதியாகக் குறைந்துவிட்டது. 18 பில்லியன் கடன் சுமையால் தடுமாறிய டெட்ராய்ட் நகரம் இறுதியில் திவால் ஆனதாக கடந்த 2013 ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இத்தகைய முன்னுதாரணங்களை இந்திய ஆட்சியாளர்கள் கண்கொண்டும் பார்ப்பது இல்லை. அமெரிக்க விசுவாசம் அவர்களின் கண்களை மறைக்கிறது. இந்த அம்சத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா எல்லோரும் ஒத்திசைவுடன்தான் சிந்திக்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்